1)சுற்றுச்சூழல் அறிவியல்:-
சூழலைப் பற்றியும், உயிரினங்களுக்கும் சூழலுக்கும் இருக்கும் தொடர்பைப் பற்றியும் அறிவியல் அணுகுமுறையில் ஆயும் இயல் சுற்றுச் சூழலியல் ஆகும். உயிருள்ளவற்றுக்கும் (குறிப்பாக மனிதன்), உயிரற்ற பூதவியல் கூறுகளுக்கும் இடையான தொடர்பாடலை விபரிக்கும் இயலாகவும் சூழலியலை கருதலாம். இவ்வியல் உயிரியல், வேதியியல், இயற்பியல், புவியியல், சமுதாயவியல், பொருளியல் ஆகிய மூல இயல்களை அறிவியல் ரீதியில் தொடர்புபடுத்தி அறியும் இயலாக கொள்லாம்.
சூழலில் ஒரு அங்கமான மனிதன் சூழலை எப்படி மாற்றியமைக்கின்றான் என்றும், மனித உடல் நலத்தை வாழ்வியலை மாறும் சூழல் எப்படி மாற்றியமைக்கின்றது என்பதும் சூழலியலின் பிரதான ஆய்வுக் கேள்விகளாக இருக்கின்றது. வள பயன்பாடு, சூழல் மாசடைதல், காலநிலை மாற்றங்கள், கழிவு பொருள் அகற்றல்/மீள் பயன்பாடு, தாங்குதிற வளர்ச்சி போன்ற துறைகளில் சுற்றுச் சூழலியலின் கவனம் இருக்கின்றது.